வெறும் சுவர் அல்ல 07: எம் சாண்ட் பயன்படுத்தலாமா?

எம் சாண்ட் என்பது என்ன?

ஆற்றுப் படுகையில் மணல் கிடைக்கிறது. ஆற்று மணலைக் கட்டிட வேலைக்குப் பயன்படுத்துகிறோம். பாறைகளை உடைத்துத் தூளாக்கிப் பெறுவதுதான் எம் சாண்ட். Manufactured Sand என்பதன் சுருக்கம்தான் M-Sand. இயற்கை உருவாக்கித் தருவது ஆற்று மணல், நாமே தயாரிப்பது எம் சாண்ட்.

தயாரிப்பு முறை

பாறைகளை உடைத்து நம் கட்டிட வேலைக்குத் தேவையான 20 எம்.எம்., 40 எம்.எம். என்ற அளவீடுகளில் நமக்குத் தேவையான ஜல்லிகளைப் பெறுகிறோம். அதைப் போன்றே மேலும் உடைத்துத் தூளாக்கி நமக்குத் தேவையான சரியான அளவில் எம் சாண்டைப் பெறலாம். அப்படி உடைத்துப் பெறும்போது, மிக நுண்ணிய அளவிலான துகள்களும் சேர்ந்து உருவாகிறது. இந்த நுண்ணிய துகள்களைப் பிரித்து எடுக்கும் வகையில் இரண்டு விதமான அடிப்படையில் எம் சாண்ட் தயாரிக்கப் படுகிறது; Water Wash, Air Wash.

நீரைப் பயன்படுத்தியோ காற்றைப் பயன்படுத்தியோ இந்த நுண்துகள்கள் வெளியேற்றப்பட்டு நமக்குத் தேவையான அளவிலான மண் துகள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த இரண்டு முறைகளிலும் எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. ஆற்று மணல் ஈரமாக வருவதைப் போல் குவாரியில் உடைத்துப் பெறப்படும் எம் சாண்டும் ஈரமாக வருவதற்கு இந்தத் தயாரிப்பு முறைதான் காரணம்.

வெடிப்பு வருமா ?

எம் சாண்ட் தயாரிப்பில் பிரிக்கப்படும் நுண்ணிய துகள்களை Crusher Dust என்று சொல்வார்கள். இதை மணலுக்கு இணையாகப் பயன்படுத்த முடியாது/கூடாது. சரியான புரிதல் இல்லாத இடங்களில் இது மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

மணல் குறிப்பிட்ட பருமனைக் கொண்டிருப்பதன் மூலமாக சிமெண்ட் உடன் சரிவரக் கலந்து உள் இடைவெளி இல்லாத பசையை உருவாக்க வேண்டும். இந்தப் பசை கான்கிரீட்டிலோ மற்ற கட்டுவேலை, பூச்சு வேலைகளிலோ ஒட்டிவைக்கக்கூடிய தன் கடமையைச் சரிவரச் செய்யும். மணல் துகள்கள் அதற்குரிய பருமனைக் கொண்டிராமல் மிக நுண்ணிய துகள்களை மட்டுமோ நுண்ணிய துகள்களை அதிகமாகவோ கொண்டிருந்தால், நாம் எதிர்பார்க்கும் பசைத் தன்மை கிடைக்காமல் சிமெண்ட் வேதிவினை புரிகையில் உரிய பக்குவம் அடையாமல் பிரிந்து பிளவுகள் ஏற்படுகின்றன.

இந்தப் பிளவுகள் (Cracks) கான்கிரீட், பூச்சு வேலைகளில் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். நாம் எதிர்பார்க்கும் உறுதித் தன்மை கிடைக்காது.

எப்படிப் பயன்படுத்த வேண்டும் ?

எம் சாண்ட் பயன்படுத்துகையில் நமக்கு வர வேண்டிய தெளிவான சிந்தனை ஒன்றுதான். இதுவும் மணல்தான் என்பதே அந்தச் சிந்தனை. எந்த வேலைக்குப் பயன்படுத்தினாலும் நாம் இவ்வளவு நாள் பயன்படுத்திய ஆற்று மணலை எந்த விகிதத்தில் கலந்து பயன்படுத்தினோமோ அதே விகிதத்தில் நாம் சிமெண்ட் உடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

 

முன்பு நாம் சிமெண்ட் கலவை தயாரிக்கும்போது சிமெண்ட்டின் நிறத்தை அதிகமாகப் பெற்ற கலவையைத் தயாரிக்கும் முனைப்பில் அதிகமாக சிமெண்ட் கலந்து, கூடுதல் வலிமை கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில் செயல்பட்டவர்களும் உண்டு. அதே எண்ணத்தில் எம் சாண்ட் கலவை தயாரித்தால் குறைந்த அளவில் சிமெண்ட் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

ஒவ்வொரு வேலைக்கும் எந்த அளவில் மணல், சிமெண்ட் கலக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதைப் பின்பற்றினாலே நாம் தரமான வேலையை செய்ய முடியும். இன்னொரு கட்டுரையில் நாம் அந்த விகிதங்கள் பற்றிப் பேசுவோம்.

நமது கடமை என்ன ?

இவ்வளவு நாளாக நாம் தொடர்ந்து ஆற்று மணலையே பயன்படுத்தி வந்தமையால் மாற்று மணலான எம் சாண்ட் பயன்படுத்துவதில் பொதுவாக ஒரு மனத்தடை இருக்கிறது. சிமெண்ட் உடன் இதைக் கலப்பதால் ஒரே மாதிரியான வலிமைத்தன்மை கிடைக்குமா என்பது போன்ற சந்தேகங்கள் மக்களின் மனத்தில் தோன்றும்.

ஆய்வுகளின் அடிப்படையில் எம் சாண்ட், நாம் பரவலாகப் பயன்படுத்தி வந்த ஆற்று மணலின் அத்தனை தரத்தையும் கொண்டது என உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் அரசு வேலைகளில் எம் சாண்ட் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நம் அரசும் எம் சாண்ட் பயன்பாட்டை முறைப்படுத்த எம் சாண்ட் குவாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட இடங்களிலிருந்தும் முறையான எம் சாண்ட் வாங்கிப் பயன்படுத்துவது நமது வீட்டுக்கு நல்லது.

– கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries